ஒரே வாரத்தில் வீடு..! வீட்டிற்கே சென்று ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஹாக்கி வீரர் கார்த்திக்:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் இந்திய ஹாக்கி அணிக்குக் கடந்த மே மாதம் தேர்வானார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். அவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு நேரக் காவலாளியாக பணியாற்றியவர். இப்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றுகிறார்.அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
நிதியுதவி:
பெங்களூரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வானார். இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த செய்தி முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போதே அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார். ரூ.10 லட்சம் நிதியுதவி செயவதாகவும் உறுதியளித்தார்.
முதலமைச்சர் சுற்றுப்பயணம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட முதுகுவலி பிரச்னை காரணமாக வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர், எறையூரில் உள்ள புதிய சுப்காட் தொழிற்பேட்டையை திறந்து வைத்தார்.
வீடு வழங்கல்:
மாலையில் அரியலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த முதலமைச்சர், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவர்களுக்கு வழங்கினார்.
இன்று பெரம்பலூர் செல்லும் முதலமைச்சர் அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டவுள்ளார்.