ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கோலாகலமான பொங்கல் விழா...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கோலாகலமான பொங்கல் விழா...

தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வரும் 15-ம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று
(ஜனவரி 12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காகக் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

வாழை மரங்கள், தென்னங்கீற்று, பனைவோலை, பல வண்ணப்பூக்கள் அலங்காரத்துடன் காணப்பட்டது. கொண்டாட்ட மனதுடன் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர். பின்னர் பொங்கல் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மாணவ,
மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க | மதுரை மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்...

பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது தித்திக்கும் பொங்கல் அல்லவா? இதற்காக நடத்தப்பட்ட போட்டியில், மாணவர்களும், மாணவிகளும் சிறு, சிறு குழுக்களாக இணைந்து பொங்கல் வைத்து அசத்தினர். கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லும் வகையில் கிராமரிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டது.

அதில் கிராம மக்களைப் போலவே தோற்றமளித்த மாணவர்கள் 'அழகிய தமிழ்மகன்'-களாகவும் மாணவிகள் ‘அழகிய தமிழ்மகள்'-களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க | பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று துவக்கம்...முதல் சிறப்பு ரயில் எங்கே?

உரலில் அரிசி குத்துதல், அம்மியில் அரைத்தல், பூக்கட்டுதல், மருதாணி வைத்தல், கோலம் போடுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் பந்தயம், சக்கர வண்டி ஓட்டுதல் நொண்டியடித்தல், பல்லாங்குழி, ஐந்துகல் ஆட்டம், கோலி குண்டு விளையாடுதல் போன்றவற்றையே பார்த்திராத பல மாணவர்களுக்கு, அவற்றைக் காண்பித்தது மட்டுமின்றி, அதை எவ்வாறு செய்வது? என்ற அனுபவமும் அளிக்கப்பட்டது.

ஆம். கிராமப்புற பெண்களைப் போல் ஆடை அலங்காரம் செய்து கொண்டு, உரலில் நெல் குத்துதல், முறத்தில் புடைத்தல் என மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அம்மியில் மஞ்சள் அரைத்தும், பூக்கட்டியும், கைவினைப் பொருட்கள் செய்தும் மாணவர்கள் அசத்தினர்.

மேலும் படிக்க | ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி...

சக்கர வண்டி ஓட்டியும், நொண்டியடித்து விளையாடியும், பல்லாங்குழி விளையாடியும், ஐந்து கல் ஆடியும், கோலி குண்டு விளையாடியும் வெற்றி வாகை சூடினர். அதைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற நிறைவாக பல்வேறு போட்டிகளில் மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க | சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவுப்பு...! சென்னையில் இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்...!