தன்னை கைது செய்வதென்றால் கனவில் தான் முடியும்: காவல்துறைக்கு சவால் விடும் மீரா மிதுன்...

தன்னை கைது செய்வதென்றால் கனவில் தான் முடியும் என்று, நடிகை மீராமிதுன் காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார். 

தன்னை கைது செய்வதென்றால் கனவில் தான் முடியும்:  காவல்துறைக்கு சவால் விடும் மீரா மிதுன்...
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் மீரா மிதுன் மீது, பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசிய மீரா மிதுன், திரைத்துறையில் இருந்து பட்டியல் சமூகத்தினரை அகற்ற வேண்டும் எனவும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால் தான் அவர்களை அனைவரும் தூற்றுவதாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
 
பட்டியலின சமூகத்தினர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய மீராமிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டிருந்த நிலையில், தன்னை தாராளமாக கைது செய்யுங்கள் எனக் கூறியுள்ள மீராமிதுன், காந்தி, நேரு எல்லாம் சிறை செல்லவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை கைது செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும் என்றும் காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.