'ராவண கோட்டம்' "திரையரங்கை முற்றுகையிடுவோம்" -முத்து ரமேஷ் எச்சரிக்கை...!!
ராவண கோட்டம் திரைப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் சங்கத்தை சேர்ந்த முத்து ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாடார் சங்கங்கள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தென் தமிழகத்தில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய தமிழ் சாதிகளை பிளவுபடுத்த நோக்கோடும் கலவரங்கள் ஏற்படுத்தும் வகையிலும் காமராஜரை பற்றி தவறான கருத்துக்களை சாதிய வெறியோடு திட்டமிட்டு பரப்ப முயலும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள ராவணக் கோட்டம் திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்" என கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும்,1876 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் வெள்ளைக்காரர்களால் துவக்கப்பட்ட சீமை கருவேலம் மர விதைகள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் துவப்பட்டுள்ளதாக காட்சி வைக்கப்பட்டிருப்பதாக விக்ரம் சுகுமாரன் கூறியுள்ளார். இது உண்மைக்கு புறம்பான காட்சி. மேலும் இமானுவேல் சேகரன் படுகொலைக்கு பின் ஏற்பட்ட முது குளத்தூர் கலவரத்தை மையமாக வைத்து காட்சிகள் அமைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் ஜாதி கலவரங்கள் மீண்டும் இந்த படம் மூலம் வராமல் தடுத்து நிறுத்திட மறு தணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குனரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இதில் குறிப்பிட்ட சமூகம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும் இந்த படம் வெளிவந்தால் மக்களிடையே கலவரங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்த அவர் உடனடியாக தமிழக அரசு இப்படத்தினை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், ராவண கோட்டம் திரைப்படம் வெளியிடப்பட்டால் தென் தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் ஓடாது எனவும் சென்னையில் வெளியிட்டால் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்த அவர் நாளை காவல் துறையில் இது குறித்து புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.