லைகா மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சனை... நடுவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்...

இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சனை... நடுவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்...
நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.  இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஏற்கனவே தனி நீதிபதி   தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் இரு தரப்பும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு   பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 
 
மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்து அதில் எடுக்கப்படும் முடிவை ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அறிக்கையாக  தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.