தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது..! திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பதில்.! 

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது..! திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பதில்.! 

அரசு அளிக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கம் திறக்க தயாராக உள்ளதாகவும், விரைவில் அரசு அனுமதி அளிக்கும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா நிவாரணத்தொகையாக முதலமைச்சரை சந்தித்து 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கியதாக கூறினார்.

மேலும், திரையரங்க உரிமையாளர்களின் சிரமத்தை எடுத்து கூறியதாக தெரிவித்த அவர், முதல்வர் பணிவுடன் கேட்டுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாகவும், திரையரங்கம் திறக்க முதலமைச்சர் விரைவில் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு அளிக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கம் திறக்க தயாராக உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே குறைவான கட்டணத்தோடு திரையரங்கை இயக்குவது தமிழகத்தில் மட்டும் தான் எனவும், இந்த கட்டணம் போதுமானதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திரையரங்கத்தின் உரிமத்தை ஒரு வருடம் புதுப்பித்து தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், நிச்சயம் செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றும், ஓ.டி.டியால் திரையரங்கம் அழியாது எனவும் கூறினார்.