ரஜினியின் டயலாக்கை பிடித்த சிவகார்த்திகேயன்..! புதிய படத்திற்கு சிங்க பாதை என டைட்டில்..!

எப்படி இவருக்கு மட்டும் நேரம் பத்துது..?

ரஜினியின் டயலாக்கை பிடித்த சிவகார்த்திகேயன்..! புதிய படத்திற்கு சிங்க பாதை என டைட்டில்..!

சின்னத்திரையில் ஒரு மெமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பிறகு தொகுப்பாளராக மக்களிடம் பிரபலமடைந்து, திரைத்துறையில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது காமெடியான வசனத்திற்காக மட்டுமல்லாது உடல்மொழிக்காகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களா உள்ளனர். சிறிய சிறிய கதாபாத்திரங்களில் தோன்றயவர், எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு ஒரு முழு கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து காக்கிச்சட்டை, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். 

இவரது நடிப்பில் வெளியான சீமராஜா, ஹீரோ போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி முடிந்துள்ளப்படம் டாக்டர். படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்ற உறுதியுடன் படக்குழுவினர் இருப்பதால், தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கின்றனர். அதேபோல, இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சையின்ஸ் ஃபிக்சிங் முறையில் உருவாகி வரும் அயலான் படத்தில், பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, சிபி.சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் ஒரு கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

இப்படி எப்போதுமே பிசியாகவே இருக்கும் சிவகார்த்தியேனின் புதிய படத்தை அறிமுக இயக்குநர் அசோக் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்தவர். டி. இமான் இசையமைக்கும் இந்தப் புதிய படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி படத்தில் பேசும் பிரபலமான பஞ்ச் டயலாக்கான சிங்க பாதை என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இதில் நடிக்கவிருக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தனை வேலைகளுக்கும்  மத்தியில், சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவது, பாடுவது, படங்களை தயாரிப்பது என பிற வேலைகளையும் செய்து வருவது அவரது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பீஸ்ட்’ படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.