சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து... மாணவர்கள் உடல்நலமே முக்கியம்!! மோடி அறிவிப்பு

கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து... மாணவர்கள் உடல்நலமே முக்கியம்!! மோடி அறிவிப்பு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு ரத்து செய்யப்படுவதாகபிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ராஜ்நாத் சிங், அமித் ஷா, மத்திய கல்வி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா இரண்டாவது அலை சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.