75 வயதில் 64 வயது பெண்ணை கரம்பிடித்த முதியவர்...! கோலாகலமாக நடந்த திருமணம்...!

75 வயதில் 64 வயது பெண்ணை கரம்பிடித்த முதியவர்...! கோலாகலமாக  நடந்த திருமணம்...!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நகரில் வசித்து வருபவர் டி.கே.சௌஹான்(75). இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் மற்றும் மூத்த அரசியல்வாதியும் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஹூப்பள்ளி நகரின் மேயராகவும், தான் இருக்கும் பகுதியில் 3 முறை தொடர்ந்து கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடித்து மகள்கள், மருமகன்கள், மகன் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் என  மொத்தம் 27 நபர்களுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். குடும்பத்தை முதன்மையான சொத்தாக கருதும் சௌஹான், தனது மனைவி சாரதா பாய் (63) மீது மிகுந்த காதல் கொண்டவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சௌகானின் மனைவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மனைவியின் மறைவுக்குப் பிறகு மிகவும் மனம் உடைந்து இருந்த சௌஹானை நன்றாக பார்த்துக் கொள்ள உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்தனர். 

செளஹானின் மனைவியான சாரதா பாயின் அக்கா அனுஸ்யா(64) இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தந்தைக்கு வெளியே இருந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று கருதி, தனது பெரியம்மாவை தந்தையின் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக தங்களது வீட்டிலேயே திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். வயதான இளம் தம்பதியினருக்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : முதலமைச்சருக்கு சவால் விட்ட ஆளுநர்...அப்படி என்ன சவால்?!!