டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி...

நடப்பாண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி...
கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.  இந்த வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி சார்பில் 380 பக்கங்கள் கொண்ட விரிவான பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அதில், கொரோனா தடுப்பூசிக்கான தேசிய திட்டத்தை மத்திய அரசு மே மாதம் தொடங்கி தொடர்ந்து மீளாய்வு செய்து வருவதாகவும்,  தற்போதைய நிலையில் மத்திய அரசு மொத்தம் 36 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 94 கோடி பேர் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த 186 முதல் 188 கோடி வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும். அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அந்த  பிரமாணபத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.