விழிப்புணர்வு பயணத்தில் விபத்து; ஸ்கேட்டர் இளைஞர் மரணம்:

குமரியில் இருந்து ஸ்கேட்டிங் பயணத்தை துவங்கிய திருவனந்தபுரத்தை சார்ந்த இளைஞர் காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்குள் விபத்தில் சிக்கி மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வு பயணத்தில் விபத்து; ஸ்கேட்டர் இளைஞர் மரணம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறு மூடு பகுதியை சார்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், முதலில் டெக்னோ பார்க்கில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தனியார் பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார்.

அனஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் மீதுள்ள அடங்காத ஆவலால் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் பல சாகசங்கள் செய்து பரிசுகளையும் குவித்துள்ளார் ,புதிதாக சாதிக்க வேண்டும் என  எண்ணியவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாகசம் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக கடந்த மே மாதம் 29ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஸ்கேட்டிங் சாகச பயணத்தை துவங்கினார். மதுரை ,பெங்களூர் ஹைதராபாத் வழியாக பயணித்தவர் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசத்தை கடந்து ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளார். இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை லாரி ஒன்று மோதிய விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

அனஸ் ஹஜாஸ் செல்போனுக்கு நண்பர் ஒருவர் அழைத்த போது எதிர்முனையில் பேசியவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தை கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுதா பகுதியில் விபத்தில் சிக்கியதாகவும் அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தகவல் தெரியவந்தது. அனஸ் ஹாஜாஸின் உடலை பெறுவதற்காக அவரது பெற்றோர்கள் ஹரியானா சென்றுள்ளனர்.

முக்கிய நிகழ்வுகள் குறித்தும் தான் கடந்து சென்ற இடங்கள் குறித்தும் முகநூலில் வீடியோ பதிவிட்டு வந்தார் அனஸ்.குமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணத்தை முடித்து சாதனை படைக்க இருந்த அனஸ்  விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனசை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்தவர்களுக்கும், ஸ்கேட்டிங் ஆர்வலர்களுக்கும் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.