வெள்ளத்தில் மிதக்கும் அசாம்... 1.33 லட்சம் மக்கள் கடும் பாதிப்பு...

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவித்து வருகின்றனர். 

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்... 1.33 லட்சம் மக்கள் கடும் பாதிப்பு...

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அசாமின் பெரிய நதியான பிரம்மபுத்திராவிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

பிஸ்வனாத், பொன்கைஹான், சிராங், டேமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், லக்கிம்பூர், மஜூலி, சிவசாகர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.