முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அவதூறு பேச்சு.. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!

முகமது நபி குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அவதூறு பேச்சு.. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!

நுபுர்சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று டெல்லி ஜும்மா மசூதி முன்பு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர்சர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் போராடி அப்புறப்படுத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரி, ஆட்சியர், உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

தற்போது உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு வரும் 13ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹவுரா பகுதியில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அங்கிருந்த பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதேபோல ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் திரளாக வந்து போரட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.