மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் இருக்க வேண்டும்..!

நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி வலியுறுத்தல்..!

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் இருக்க வேண்டும்..!

மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், ஹிந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்,'' என தூத்துக்குடி 
எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கனிமொழி பேசும் போது, சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், தங்களது முதற்கட்ட தேர்வுகளின்போது, பிரதான தேர்வைப் போல, தங்களது விருப்ப மொழியின் கீழ் எழுத முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, ஹிந்தி தெரியாத அல்லது பேசாத 
மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இது பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியம் எனக் கூறினார்.  

ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் 26 சதவீதம் மட்டுமே. ஆனால், தேர்வு முடிவுகளில் இவர்களில், 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதை காண முடிகிறது. மத்திய பணியாளர் ஆணையம், ரயில்வே தேர்வுகள், வங்கித் தேர்வுகள் என அனைத்துமே ஹிந்தியில் தான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய அவர், ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது என்றார். 
எனவே சிவில் சர்வீஸ் தேர்வு உட்பட மத்திய அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளையும், அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலுமே நடத்தவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் 
கொண்டுள்ளார்.