மருத்துவமனை தொடங்குவோருக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்.... ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு
ஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதீதிவிரமடைந்த வருகிறது.. முதல் அலையை விட கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
அதற்கு மத்திய- மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் தொடங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
விஜயவாடாவில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டத் தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட 3 மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்.
மூன்றாண்டுக்குள் நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வருபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.