கடும் வெள்ளப்பெருக்கில் நீரில் மூழ்கிய 222 கிராமங்கள்...! ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி!

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 222 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

கடும் வெள்ளப்பெருக்கில் நீரில் மூழ்கிய 222 கிராமங்கள்...! ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி!

அசாமில் கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.  

இடைவிடாத மழையால் திமா ஹசாவ் மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிடோக்செரா ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த சுமார் ஆயிரத்து 245 பயணிகள் பதர்பூர் மற்றும் சில்சார் வரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.  119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக ரயில்வேத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.