திருக்குறளின் உண்மையான கருப்பொருள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டதா?

திருக்குறளின் உண்மையான கருப்பொருள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டதா?

டெல்லி லோதி தோட்டத்தஇல் அமைந்துள்ள  தமிழ் கல்விக்கழகத்தின்  பள்ளிக்கூட வளாகத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து இன்று வைத்தார்.  

இதனைதொடர்ந்து அப்பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர்,  மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என்.ரவி உரை நிகழ்த்தினார்,

அப்போது பேசிய அவர், திருவள்ளுவரின் சிலை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைவதாகவும்,  இந்த விழாவில் நமது வருங்கால தூண்களான மாணவர்களையும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் , டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளிகள் நூற்றாண்டு கடந்து , மென்மேலும் வளரவும் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேசிய ஆளுநர்,

திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி எனவும்
தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கிவிட்டதாகவும், ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது எனவும் கூறியுள்ளார்.

திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்

திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும் எனவும் பேசியுள்ளார்.

மேலும் அவர், தமிழக ஆளுநராக பதவியேற்றபோது அவருக்கு திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாக கிடைத்தது எனவும், 
அதில் பெரும்பாலானவை   ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனவும் கூறியுள்ளார்.

ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு  என ஏற்கப்பட்டுள்ளது, ஆனால், ஜி.யு.போப்பின்  திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பது  மொழிபெயர்ப்புகளில் தவிர்க்கப்பட்டுள்ளது. பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு பொருளாகவும், சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாக காட்ட முயன்றனர் எனவும் ஆனால் இந்தியா அவ்வாறு இல்லை எனவும்  இந்தியா கலாச்சாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது எனவும் கூறியுள்ளார்.

தமிழ் அறிஞர்கள் காலனி மொழிபெயர்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான கருபொருட்களை வெளிக்கொணர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல, தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிக பழமையானது ஆகும், 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரங்களை மாணவர்களும் இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வருங்கால இந்தியாவின் தூண்களான 
மாணவர்கள் அனைவரும் தங்கள் இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் எனவும்  எக்காரணத்தை கொண்டும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், மாணவர்கள் தோல்விகளை கண்டு  துவண்டு விடக்கூடாது மாறாக தோல்வியிலிருந்து வெளிவர தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும்  அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: அக்னிபாத் திட்டம்.....பதிலளிக்குமா மத்திய அரசு...!!! உச்சநீதிமன்றம் உத்தரவு!!