இடைதேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி... 

பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார் என அதிகாரபூர்வமாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

இடைதேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி... 

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 இந்நிலையில் இடைத் தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைனும், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாமும் போட்டியிடுகிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் அமைச்சரும், இந்தத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.