நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி...!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
நண்பரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி:
ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மறைவை ஒட்டி அரசு சார்பில் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரமதர் மோடியும் கலந்து கொண்டு, தனது நெருங்கிய நண்பர் அபேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படிக்க: அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?
அரசு பணத்தை விரயம் செய்வதாக குற்றச்சாட்டு:
இந்நிலையில், இரண்டாம் உலக போருக்கு பிறகு 2வது முறையாக ஜப்பானின் பிரதமர் ஒருவருக்கு அரசு செலவில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இதற்கென டோக்கியோ ஒலிம்பிக்குக்கு நிகரான பாதுகாப்புடன் பல கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு பணத்தை விரயம் செய்வதாக அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இரு நாடுகளுக்கான உறவை அதிகரிக்க வேண்டும்:
முன்னதாக, டோக்கியோ சென்ற மோடி அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது ஷின்சோ அபேயுடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் அபேயின் இழப்புக்கு இந்தியா வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய நல் உறவை, அபே விரும்பியபடி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.