நீட் முதுநிலை படிப்புகளில் உள்ள காலி இடங்கள்... சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆயிரத்து 456 இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

நீட் முதுநிலை படிப்புகளில் உள்ள காலி இடங்கள்... சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த  உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஆயிரத்து 456 இடங்கள் நிரப்பப்படாமல் இன்னும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. இந்த வழக்‍கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆயிரத்து 456 இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஏற்கனவே ஒன்பது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டால் அது நடப்பு கல்வி ஆண்டில் பாதிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  மீண்டும் கலந்தாய்வு நடத்துவது கால விரயம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

எனவே மருத்துவ படிப்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள், 40 ஆயிரம் இடங்களில் ஆயிரத்து 456 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும் கூறினர். 

அனைத்தையும் கருத்தில்கொண்டதில் மனுதாரரின் சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை ஏற்க முடியாது என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.