நாணயங்களை விழுங்கிய முதியவர்...! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம்...!

நாணயங்களை விழுங்கிய முதியவர்...! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம்...!

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன் (60). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நாணயங்களை விழுங்கி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதனால் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது திம்மப்பாவின் வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த நாணயங்களை அகற்ற வேண்டும் இல்லையென்றால் திம்மப்பா உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திம்மப்பா பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.  

இந்த அறுவை சிகிச்சையில் அவர் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அகற்றினர். அந்த நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது. திம்மப்பாவின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது திம்மப்பா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : சுரங்கப்பாதை அமைக்க கோரிய மக்கள்...! சாலை மறியல் போராட்டம்...!