இறந்தவர்களின் உடல்கள் மூலம் கொரோனா பரவுமா.? வெளிவந்த எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள்.! 

இறந்தவர்களின் உடல்கள் மூலம் கொரோனா பரவுமா.? வெளிவந்த எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள்.! 

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நுழைந்த கொரோனா இந்தியா முழுக்க பரவியது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்யவிடாமல் அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சமும் இருந்தது. 

இந்த அச்சம் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. அதேபோல இறந்தவர்களை ஊருக்குள் கொண்டு வரவும் கடும் எதிர்ப்பு இருந்தது. அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் மூலமாக கொரோனா பரவுமா என்பதைக் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு ஒரு ஆய்வை தொடங்கியுள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில்  ‘கடந்த ஒரு ஆண்டாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை சார்பில், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தி வந்தோம். கிட்டத்தட்ட 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 முதல் 24 மணி நேரத்தில் இந்த பரிசோதனையை மேற்கொண்டோம்.


இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமான பின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை" எனக் கூறியுள்ளார்.