மருத்துவமனை வளாகத்தில் பாஜக பிரமுகருக்கு லத்தி அடி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

மருத்துவமனை வளாகத்தில் பாஜக பிரமுகருக்கு லத்தி அடி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

மகாராஷ்ட்ராவில் 5 காவலர்கள் இணைந்து ஒரு நபரை லத்தியால் மாறி மாறி தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 9- ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ஜல்னா காவல்துறை கண்காணிப்பாளர் விநாயக் தேஷ்முக் தெரிவித்தார்.

ஜல்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்பட்ட படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அதன்பின் இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனையின் கவனக்குறைவு தான் காரணம் என உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மருத்துவமனை வளாகத்தையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் இந்த சம்பவம் அறிந்ததும், அங்கு விரைந்த உள்ளூர் பாஜக பிரமுகர் நரியல்வேல், மருத்துவமனையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதற்குள்ளாக அங்கு வந்த போலீசார், உயிரிழந்த உறவினர்களை சமரசம் செய்துள்ளனர். ஆனால் அது பலனளிக்காமல் போனதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் காட்டமாக பேசியதாக தெரிகிறது. 

உஷாரான நரியல்வேல் அதனை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரை சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளனர். தன்னை விடும் படி அவர் கெஞ்சியும் போலீசார் இரக்கம் காட்டாமல் மாறி மாறி லத்தியால் தாக்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் இந்த வீடியோ வெளியானது தொடர்ந்து பதில் தெரிவித்துள்ள ஜல்னா காவல்துறை கண்காணிப்பாளர் விநாயக் தேஷ்முக், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

மேலும் சம்பந்தபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.