அப்பாடா.. பதவி ஏற்றுவிட்டோம்... நிம்மதி பெருமூச்சு விடும் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள்!!

அப்பாடா.. பதவி ஏற்றுவிட்டோம்... நிம்மதி பெருமூச்சு விடும் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள்!!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள், புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். 

நடந்துமுடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களைப் பிடித்த நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களைக் கைப்பற்றினர். இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார் ரங்கசாமி. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்.எல்.ஏ. க்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக இன்று பதவி ஏற்க உள்ள லட்சுமி நாராயணனுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புக்காக  சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சபாநாயகர் அலுவலகத்தில் நடக்கும் பதவியேற்பு நிகழ்வில், எம்.எல்.ஏ.க்களுடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்ட்டனர். முதலில் முதலமைச்சர் ரங்கசாமி பதவி ஏற்க, அவரைத்தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களும், இறுதியாக நியமன எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றனர்.