தாய் மொழியுடன் சேர்த்து மக்கள் இந்தியையும் கட்டாயம் பேச வேண்டும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தாய் மொழியுடன் சேர்த்து, அலுவல் மொழியான இந்தியையும் மக்கள்  கட்டாயம் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தாய் மொழியுடன் சேர்த்து மக்கள் இந்தியையும் கட்டாயம் பேச வேண்டும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த  தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும், தங்கள் தாய் மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.  தாய்மொழியுடன் இந்தி இணைவதில் தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சுய சார்பு என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் மட்டும் வருவதல்ல, அது மொழியையும் சாரும் என்று கூறினார். நமது பண்டையக் கால கலாசாரத்திற்கும், நவீன உலகிற்கும் இந்தி பாலமாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட அவர்,

இந்தியை நம்முடன் இணைத்துக் கொண்டால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை பலப்படும் என தெரிவித்தார். பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் இந்தி மொழியை பயன்படுத்தமுடியும் போது நாம் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.