பிறந்த நாள் விழாவிற்கு உறவினர்களை அழைத்த மாடல் அழகி...வீட்டில் பிணமாக மீட்பு..! இவர் தான் காரணமா?
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்துவிட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷஹானா. மாடல் அழகியான இவர், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஷஹானா சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு, கோழிக்கோட்டில் சேவாயூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஷஹானா அவரது அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது கணவர் அறையை திறந்து பார்த்துள்ளார். அங்கு ஷஹானா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷஹானா இறந்தது பற்றி அவரது உறவினர்களுக்கு போலீசார் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் ஷஹானா சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், அவரது கணவர் சஜ்ஜாத் தொடர்ந்து பணத்துக்காக ஷஹானாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஷஹானாவின் தாய் கூறும் போது, ஷஹானா தன்னை கணவர் துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே என்னிடம் கூறி இருந்தார் என்றும், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றும், தற்போது கூட அவரது 20வது பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்து இருந்தார் எனவும் தெரிவித்தார். அதன்படி போலீசார் சந்தேகத்தின்பேரில் சஜ்ஜாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.