20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்...  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்...  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற 26-வது போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் வந்த டேவிட் மலன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே அதிரடியில் மிரட்டிய தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். முடிவில் ஜோஸ் பட்லர் 71 ரன்களும், அவருடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ் 16 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 11 புள்ளி 4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.