யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம்... ஸ்பெயின், இத்தாலி அரையிறுதிக்கு தகுதி...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம்... ஸ்பெயின், இத்தாலி அரையிறுதிக்கு தகுதி...
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. 68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி, பதில் கோல் அடித்தது. போட்டி முடிவில் 1 க்கு 1 என்ற சமநிலை நீடித்ததால், கூடுதலாக 30 நிமிடம் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை என்பதால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க, பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
 
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இத்தாலி மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடிக்க, பெல்ஜியம் அணி சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இத்தாலி அணி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.