7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி...

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி, துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன், 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதே சமயம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வார்னர், அதிரடியாக ஆடி 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து வெளியேறினார். இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் ஆடினார். இதனால் 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனால் அந்த அணிக்கு 12 கோடி ரூபாயும், 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அதே சமயம் இறுதிப்போட்டியில் 77 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷுக்கு ஆட்ட நாயகன் விருதும், இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் உள்பட 289 ரன்கள் குவித்த டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.