தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி... கோப்பையை தட்டிச்சென்றது உத்தரபிரதேச அணி...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 11வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் 3 - 1 என்ற கோல்கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தி உத்தரபிரதேசம் ஹாக்கி அணி வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச் சென்றது.

தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி... கோப்பையை தட்டிச்சென்றது உத்தரபிரதேச அணி...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஏற்பாட்டின் பெயரில் கடந்த 16ந் தேதி முதல் தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷீப் ஆடவருக்கான போட்டிகள் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதில் 27 அணிகள் கலந்து கொண்டன. முதலில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் காலியிறுதி போட்டியிலும் விளையாடின. 

இதையெடுத்து சண்டிகர், ஓடிசா, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று, நேற்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டிக்கு முன்பாக போட்டியின் நிறைவு விழா இன்று ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார்.

இதில் தமிழக சுற்றுசூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஹாக்கி இந்தியா துணைத்தலைவர் போபாலநாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனந்த்க்குமார், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.  போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டியின் 15வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணி வீரர் சாரதாநந்துதிவாரி பெனால்டிக்கார்னர் மூலமாக முதல் கோலை அடித்தார்.

இதையெடுத்து 16, 34வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணியில் அருண் சஹாணி 2 கோல்கள் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். சண்டிகர் அணி வீரர் ராமன் 51வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் இறுதியில் உத்தரபிரதேச ஹாக்கி அணி 3 - 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச் சென்றது. 2வது இடத்தினை சண்டிகர் அணி பெற்ற வெள்ளி கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக நடைபெற்ற 3, 4வது இடத்திற்கான போட்டியில் ஒடிசா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி வெண்கல கோப்பையை தட்டிச்சென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேச ஹாக்கி அணிக்கு கனிமொழி எம்.பி தங்க கோப்பை வழங்கினார். 2வது இடம் பிடித்த சண்டிகர் அணிக்கு அமைச்சர் கீதாஜீவன் வெள்ளி கோப்பை வழங்கினார். 3வது இடம் பிடித்த ஒடிசா அணிக்கு அமைச்சர் சிவ.மெய்யநாதன் வெண்கல கோப்பையை வழங்கினார்.