உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி :  15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 18ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக 20க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் துணைக் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, ரோகித் சர்மா, செத்தேஸ்வர் புஜாரா, என அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி ஆகியோருடன் ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வாகியுள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஆல் ரவுண்டராக இடம் பெற்றுள்ளார். பந்துவீச்சை பொறுத்த வரையில், ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மயாங்க் அகர்வால், கே.எல். ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.