துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட 10 டன் போதை பொருள் கடத்தல்..!

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்கு பெட்டகம் மூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 10 டன் போதை பொருள் பறிமுதல்

துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட 10 டன் போதை பொருள் கடத்தல்..!

தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாப்பி சீட் என்னும் போதை பொருள் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த கண்டெய்னரில் ஒயிட் சிமெண்ட் இருந்தது. அதற்கு பின்னர் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருளான பாப்பி சீட் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கன்டெய்னரில் இருந்த சுமார் 10 டன் எடைக் கொண்ட பாப்பி சீட் எனப்படும் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1.75 கோடி என கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.