"ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" ..! - மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற ஈராண்டு சாதனை மலர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி ஆகியவற்றை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1 இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கி மற்றும் "புதுமைப் பெண்", "நான் முதல்வன்" திட்டங்களின் கீழ் ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? எடுத்துக்கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா என்று நானே என்னை கேட்டுக்கொண்ட போது என்னுடைய மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் தான் என கூறினார்.
மேலும், சனாதனத்தால் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் மக்களை திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரையில் ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமுதாயமாக மாற்றி காட்டியவர் தந்தை பெரியார், சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளை பெற்றாக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு எளிய மக்களுக்கான இயக்கத்தை உருவாக்கி ஆட்சி அமைத்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா, தன்னுடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றுக் காட்டிய சாதனைகள் திட்டங்களை ஆட்சி என்பதற்கான இலக்கணம் என்ன என்பதை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் கலைஞர் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதியது அல்ல என கூறிய அவர், சிறுவனாக இளைஞனாக இருந்தபோதே திராவிட கழகத்திற்கு எனது ஒப்படைத்துவிட்டு கலைஞர் உத்தரவை மீறாமல் பணியாற்றி வந்துள்ளதாகவும், எதையும் தாங்க வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா, இதையும் தாங்க வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் கலைஞர் என பெருமிதம் கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர், இது மக்கள் தந்த பொறுப்பு எனவும், மக்களுக்காக பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை, என்னால் முடிந்த அளவிற்கு பணியாற்றுகிறேன் ஓய்வின்றி பணியாற்றுகிறேன் என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன் என குறிப்பிட்ட அவர், அதற்கான பயனை மக்களின் முகங்களில் பார்க்கிறேன், மக்கள் காட்டும் அன்பில் கரைகிறேன் எனவும் உணர்ச்சிவசமாக பேசினார்
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என திருக்குறள் கூறுகிறது,
எல்லோருக்கும் எல்லாம் என கூறுவது திராவிட மாடல் என்றும், அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாக புரியும்,நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளோடு செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நடத்தியதாக கூறிய அவர், சொன்னதை செய்வது தான் திராவிட மாடல் என்றும், சொன்னதை செய்வதுதான் திராவிட மாடல் எனவும் தெரிவித்தார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இரண்டு ஆண்டுகளாக ஏழை மக்களின் நலன் காக்கும் குடியிருப்பாக இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர், தலைமைச் செயலகம், முதன்மை செயலமாக மாறியுள்ளது என்றும், அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது பலரால் விரும்பப்படுவதாகவும் கூறினார்
பின்னர் தொடர்ந்து அவர், "இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எட்டுகோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தின் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது. உங்கள் இல்லத்தில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டப்படி ஊட்ட உணவை வழங்குகிறது இந்த அரசு
உங்கள் இல்லத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால் அவர்களுக்கு காலை நேரத்தில் உணவு தருகிறது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் ஒரு மாணவி இருந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வழங்குகிறது இந்த அரசு
உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் பேருந்துகளில் கட்டணமில்லாத வசதியை ஏற்பாடு செய்து தந்துள்ளது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் ஒரு கல்லூரி மாணவர் இருந்தால் அவரை அனைத்து விதங்களிலும் தகுதிப்படுத்துவதற்கு ' நான் முதல்வன்' திட்டம் மூலம் வழிகாட்டுகிறது இந்த அரசு. உங்கள் இல்லத்தில் ஒரு விவசாயி இருந்தால், இல்வச மின் இணைப்பு கொடுத்துள்ளது இந்த அரசு. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக கடனுதவியை வழங்கி இருக்கிறது இந்த அரசு.", என அரசின் சாதனைகளை விளக்கினார்.
மேலும், " மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள்.
கைம்பெண் உதவித் தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்த அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு இந்த ஆட்சி வந்ததும் 1000 ரூபாய் மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சி தான் எனது மகிழ்ச்சி.
தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்தக் கருவியை வாங்குவதற்கு பணமில்லை. அந்த சிறுவனுக்கு நானே காதொலி கருவியை பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சப்தங்களைக் கேட்டு சஜீத் சிரிப்பதைப் பார்க்கும் போதுதான் எனக்கு மகிழ்ச்சி.
டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா ஆகியோரின் அன்பு மகள் தான் டானியா.இப்போது அவருக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
முகச்சிதைவு நோய் காரணமாக அவரது முகத் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளதால், உடன் படிக்கும் மாணவிகளால் கூட அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற செய்தி கிடைத்ததும் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகிறார். அந்தக் குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி", எனவும் கூறினார்.
அதோடு, "மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வர வைப்பது சாதாரணமான செயல் அல்ல. மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. முகம் மலர்வது என்பது இயற்கையான செயல். அத்தகைய மலர்ச்சியை இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில்க் வெளிப்பட வைத்தது தான் இந்த அரசின் சாதனை ஆகும்.
திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற வேகத்தோடு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், அரசு கஜானாவின் நிலைமை என்ன? அதையெல்லாம் மாற்றி இருண்ட தமிழகத்தில் விடியலை உருவாக்கியுள்ளோம் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழ்நாட்டை உருவாக்கி விடுவோம் என்ற நம்பிக்கை அதிகமாகியுள்ளதாகவும்,உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன்", என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க } தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு - பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை - முதலமைச்சர் 2 ஆண்டு நிறைவு விழாவில் பேச்சு