பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 21 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ...!

மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் 21 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 21 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ...!

மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் 21 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 21 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பவானியாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரை புரண்டோடுகிறது. அதனால்,  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அறிவுறுத்தி வருகின்றார். மேலும்,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் 5 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.