7 பேர் விடுதலையில் காங்கிரஸின் நிலைபாடு என்ன? - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு விளக்கம்.! 

7 பேர் விடுதலையில் காங்கிரஸின் நிலைபாடு என்ன? - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு விளக்கம்.! 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரில் விடுதலையோ தண்டனையோ நீதிமன்றத்தின் வாயிலாக சட்டத்தின் படி நடைபெற வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என திருநாவுக்கரசு எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு குடியரசு தலைவர் அழுத்தம் தர வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், ரூபி மனோகர் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்த்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு எம்.பி, கூறும்போது "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுதலின் படி இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அந்தந்த மாநில கவர்னரை சந்தித்து கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 கோடி பேருக்கு தான் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுவும் 3 கோடி பேருக்கு தான் 2வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 3% பேருக்கு தான் செலுத்த பட்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் 60% மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 


தற்போது நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பேருக்கு தான் போடப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் 130 கோடி பேருக்கும் போட 3 வருடம் ஆகும். அதற்குள் அடுத்த அலை வரும் என்கிறார்கள் வல்லுனர். எனவே தடுப்பூசியை விரைவாகவும், இலவசாமாகவும் வழங்க வேண்டும். 3 பிரிவுகளில் தடுப்பூசி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது. மாநில அரசுக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதை தார்மீக ரீதியாக ஏற்று கொள்ள  வேண்டும். 7 கோடி தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி நாள் தோறும் இலவசமாக 1 கோடி பேருக்கு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அதை வழக்கம் போல மோடி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கொரோனாவை எதிர்கொள்ள உழைத்து வருகிறார். ஆனால் தடுப்பூசியும்,மருந்தும் மத்திய அரசு தானே கொடுக்க வேண்டும்.மக்கள் தடுப்பூசி போட தாயாராக இருக்கிறார்கள். ஆனால் தற்போது தடுப்பூசி இல்லை, தட்டுப்பாடு இருக்கிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரில் விடுதலையோ தண்டனையோ நீதிமன்றத்தின் வாயிலாக சட்டத்தின் படி நடைபெற வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு" எனக் கூறினார்.