குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு...! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்...!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு...! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்...!

தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் தமிழக காவல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், காவல் உயரதிகாரிகளின் பெயர்களும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இதுவரை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீஸார், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய காவல் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள்  டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிக்க : யானை வழித்தடங்கள் அடைப்பு ; ஈஷா யோகா மையத்தின் மீது மனு தாக்கல்...!