மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்காலிகமான இடத்தில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமான இடத்தில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புஷ்பவனம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், நாடு முழுவதும் புதிதாக 16 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் பணி தொடங்கி, வெளிநோயாளிகள் துறை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ப்ராஜெக்ட் செல் அமைப்பு உருவாக்கி, வெளிப்புற நோயாளிகள் பிரிவு தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமான இடத்தில் அமைவதால் கொரோனா இல்லாத பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும் வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.