இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்...உதயநிதி!!

இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்...உதயநிதி!!

ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறவுள்ளது.  இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயலாளர்  அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரும் ஜூன் 13 முதல் 17 வரை சென்னை EA மாலில் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகள் நடத்த 1.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழ்நாடு அரசு. அதனை மையமாக வைத்து ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடருக்காக 1.50 கோடி ரூபாயின் காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் ராமச்சந்திரனிடம் வழங்கினார்.  

தொடர்ந்து அமைச்சரிடம் இந்த போட்டிகளை அரசு வருவாய் நோக்கத்துடன் நடத்துகிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசு சர்வதேச போட்டிகளை நடத்துவது வருவாய் நோக்கத்தில் இல்லை, விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ஸ்குவாஷ் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த யோசனை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதையும் படிக்க:  உயிரை துச்சமென நினைத்து முதலாளிக்காக பாம்பிடம் போராடிய நாய்...!!