ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?

ஈரோடு கிழக்கு  சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாஜகவின்  மையக்குழு ஆலோசனை  கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.  

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் :

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து, காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

பணிக்குழுவை அமைத்த பாஜக :

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் தி.மு.க - அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. தொடர்ந்து, இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்...!

பாஜக மையக்குழு கூட்டம் :

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் உள்ளாட்சி தேர்தலை போல் ஈரோடு கிழக்கு  சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக தனித்து போட்டியிட்டு பலத்தை அறிய தலைமை விரும்புவதால் நாளை முக்கிய முடிவு எடுக்கபடலாம் எனவும் கூறப்படுகிறது

முன்னதாக, கடலூரில் நாளை காலை செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், மாலை மையக்குழு கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.