நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ...இயக்குநர் கவுதமன் ஆவேசம்...

ஜெய் பீம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் பத்திரிகையாளர் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் கவுதமன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  ...இயக்குநர் கவுதமன் ஆவேசம்...

செந்தமிழ் நாடு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கவுதமன் கூறுகையில், கர்நாடகத்தில்  தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளும் வலிகளும் ஏராளம். நான் தமிழன் என்பதால் கர்நாடகா மாநிலத்தில் மற்றவர்களை குறை கூறவில்லை எனவும், சதாசிவம் கமிஷன் பரிந்துரை செய்தது போல் 2.5 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் ஜெய் பீம் படம் நல்ல காவியம். அதை வரவேற்கிறோம். ஆனால் படத்தில் பல காட்சிகள் தவறாக காட்டியதாக கூறிய அவர், ஜெய் பீம் படத்தில் அந்தோணி சாமி கதாபாத்திரத்தை குரு மூர்த்தியாக மாற்றியது ஏன் எனவும், காலண்டரில் அக்னி சட்டியை வைத்தது ஏன் எனவும், வன்னியர் சமுதாயத்தை தூண்டும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெய் பீம் திரைப்படம் எடுக்கும் போது  சாதி தொடர்பான பிரச்சினைகள் பற்றி சிந்திக்க வில்லையா எனவும், சர்ச்சை காட்சியை நீக்காமல் இருக்க என்ன காரணம் எனவும் கேள்வி எழுப்பிய அவர், இதற்காக சூர்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் பத்திரிகையாளர் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.