ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு...! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...!!

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு...! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...!!

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பிளர் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 76, 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.  இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். 

ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் இதன் மீது நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதன் பின்னர், இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒத்திவைத்தார்.