நடிகையை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு... அடையாறு மகளிர் காவல்துறையினர் அதிரடி!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகையை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...  அடையாறு மகளிர் காவல்துறையினர் அதிரடி!!

மலேசிய பெண்ணான நடிகை சாந்தினி சென்னை பெசண்ட் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் முன்னாள் அ.தி.மு.க தொழிற்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருடங்களாக தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்மாக்கியுள்ளார் எனவும், இதுவரை அவரால் 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் அவரின் உதவியாளரான பரணி என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்த அவர், தனக்கு அவரிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு தன்னை கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றியதோடு தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதும் அவரின் உதவியாளர்  பரணி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இந்த வழக்கானது துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை சாந்தினி அளித்த புகார் மற்றும் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐ.பி.சி 323 வேண்டுமென்றே காயப்படுத்துதல், 313 பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், 417 நம்பிக்கை மோசடி, 376 ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல், 506(1) கொலை மிரட்டல், 67 a IT act ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல், பகிர்தல்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.