11 வயது சிறுவன் உயிரிழப்பு..! விளையாட்டு விபரீதமானது...!!!

11 வயது சிறுவன் உயிரிழப்பு..! விளையாட்டு விபரீதமானது...!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் நகர் 8 வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். அவருடைய மனைவி அமுதா அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ராம்சரண் (13), கார்த்திக் (11) என்ற இரு மகன்கள் உள்ளனர். கார்த்திக் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக வீடு கட்டி கொண்டு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதாவின் இரு மகன்களும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டு பின்னர், விளையாட்டாக  தூக்கு போட்டு இறப்பது எப்படி என நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இதனால் படுக்கை அறையில் உள்ள ஃபேன் கொக்கியில் கார்த்திக், புடவையால் தூக்கு போட்டு நடித்து காட்டியபோது நடிப்பு நிஜமானது. இதனை அறிந்த அண்ணன் ராமச்சரன், தம்பி கார்த்திக்கை காப்பாற்ற அலறினான். பின்னர் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கார்த்திக்கை தூக்கிலிருந்து இறக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.