தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை... அன்புமணி விமர்சனம்!! 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை... அன்புமணி விமர்சனம்!! 

கொரோனா முதல் அலைக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தது. 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலின்போது பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலையாக இருந்தது. மீண்டும் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ எட்டியது. தமிழகத்தில், கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகபட்சமாக ரூ.100.04க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று பல இடங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்.

கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பதுதான் விலை உயர்வுக்குக் காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாகக் கிடைக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய,மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.