ஜே.இ.இ தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமையின் முடிவு...வரவேற்கும் அன்புமணி ராமதாஸ்!

ஜே.இ.இ தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமையின் முடிவு...வரவேற்கும் அன்புமணி ராமதாஸ்!

ஜே. இ. இ தேர்வு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கும்  தேசிய தேர்வு முகமையின் முடிவை வரவேற்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜே இ முதல்நிலைத் தேர்வு:

ஜே இ முதல்நிலைத் தேர்வு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கிய ஜே இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள்  தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மதிப்பெண்கள் இல்லை:

ஏனென்றால், இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஜே இ தேர்வு...சிக்கலில் தமிழக மாணவர்கள்...உறுதியளித்த அன்பில் மகேஷ்!

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை:

எனவே, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி, அவர்கள் ஜே இ தேர்வை எழுதும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ் வரவேற்பு:

இதில் ஜே. இ. இ விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ஜே. இ. இ தேர்வு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கும்  தேசிய தேர்வு முகமையின் முடிவை வரவேற்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1.  ஜே. இ. இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள்  பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின்   இந்த நடவடிக்கை  நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது! என்றும்,

2. தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும்  என அறிவிக்கப்பட்டிருந்ததால்  தமிழக மாணவர்களால்  ஜே. இ. இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை!

3. தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்!

4. அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.   இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜே. இ. இ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.