குரூப் 4 பணிகளுக்கு மறு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!

குரூப் 4 பணிகளுக்கு மறு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி...எதிர் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த பிடிஆர்!

ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.

எனவே, உடனடியாக தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.