விஜய்காக, விஷாலை வம்பிழுத்த செல்லூர் ராஜூ...சர்ச்சையான பேச்சு!

விஜய்காக, விஷாலை வம்பிழுத்த செல்லூர் ராஜூ...சர்ச்சையான பேச்சு!

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது 69 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் பிறந்தநாள் விழா, மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

இதையும் படிக்க : ”திமுக மட்டும் தான் எங்கள் அரசியல் எதிரி... பாஜகவும், காங்கிரசும் எங்களுக்கு நண்பர்கள் தான்” - செல்லூர் ராஜூ அதிரடி!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லி தான் மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மைய்யமும் எங்கே போனது என தெரியவில்லை. எனவே, விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்" என்று கூறினார்.