அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...

அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும்படி பள்ளி கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்ட நீதிபதி,மாவட்ட வாரியாக அறிக்கைகளை பெற்று, அதன் அடிப்படையில் பள்ளி கல்வி ஆணையர், ஜூலை 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.