சி.பி.ஐ.க்கும் தன்னாட்சி அதிகாரம்... மதுரை உயர்நீதிமன்றக்கிளை கருத்து...

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்படத் தேவையான சட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது.

சி.பி.ஐ.க்கும் தன்னாட்சி அதிகாரம்... மதுரை உயர்நீதிமன்றக்கிளை கருத்து...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரூ.300 கோடி நிதி மோசடி வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்படத் தேவையான சட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தணிக்கை ஆணையரகத்தைப் போல சுதந்திரமாக செயல்பட வேண்டும். சிபிஐக்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். அமைச்சரவை செயலாளரைப் போல தனித்த அதிகாரத்துடன் அமைச்சர் மற்றும் பிரதமரிடம் நேரடியாக அறிக்கையளி்க்கும் வகையில் சிபிஐ இயக்குநருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் தனித்து செயல்பட வேண்டும்.

அமெரிக்காவின் எப்பிஐ மற்றும் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு போலீசைப் போல நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும். சைபர் மற்றும் தடயவியல் துறை, நிதி தணிக்கை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர்களை சிபிஐயில் சேர்ப்பது குறித்து 6 வாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சிபிஐக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கட்டுமானங்கள், குடியிருப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதியை 6 வாரத்திற்குள் ஏற்படுத்த வேண்டும். 

கடந்த 31.12.2020 வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.