பட்டாசுகளை அனுமதிக்க கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

பட்டாசுகளை அனுமதிக்க கோரி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பட்டாசுகளை அனுமதிக்க கோரி  4 மாநில முதலமைச்சர்களுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி, அரியானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி டெல்லி, அரியானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் நலிவடைய செய்யும் என்றும் தமிழகத்தில் மட்டும் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு பட்டாசுக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு விற்பனைக்கு மொத்தமாக தடை விதிப்பது மற்ற மாநிலங்களையும் இதுபோன்ற முடிவை எடுக்க நிர்பந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர். ,இதனால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலும் முடக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

காற்று மாசு காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்வதாகவும், இருப்பினும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.